Subscribe Us

'உணவுக்கு சரியாக கஸ்டப்பட்டோம் கோதுப்பருப்பை தண்ணீரில் அவித்து பசியாறினோம்"

இறுதிக் கட்டப் போரில் சிக்கி உயிர்தப்பிய ஒரு பெண்மணியின் கண்ணீர்
'நாம் இடம்பெயர்ந்து இராமநாதபுரம், பிரமணங்குளம், துறவில், தேவிபுரம், இரணைப்பாலை என 3 மாதங்கள் வரை அலைந்து நாடோடியாக புதுமாத்தளனை அடைந்தோம். அங்கு தினமும் வெறும் பருப்பை தண்ணீரில் அவித்து உண்டோம்." என இறுதிக் கட்ட போரில் உயிர்தப்பிய சிவராசா ரஞ்சனி தெரிவித்தார்.
இறுதிக் கட்ட யுத்தத்தில் சிக்கி வவுனியாவை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், அம்பாறை, நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி (வயது 32) என்ற பெண்மணி தனது கசப்பான அனுபவங்களை வெளியிட்டிருந்தார்.
இதன்போது அவரது கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொள்கையில், 'என்ர கணவர் சிவராசா. கிளிநொச்சியைச் சேர்ந்தவர். நான் நற்பிட்டிமுனை. 1982ல் மணம் முடித்தோம். எங்களுக்கு 3 பிள்ளைகள். 2006ம் ஆண்டு கிளிநொச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து திரும்ப 'பாஸ்" கிடைக்கேல. கடந்த வருடம் யுத்தம் தொடங்கிட்டுது. வேறு வழியில்லாமல் இடம்பெயர ஆரம்பித்தோம். வட்டக்கச்சி, இராமநாதபுரம் என ஆரம்பித்து புதுமாத்தளன் வரை 3 மாதங்கள், உடுத்த உடுப்போட நாடோடிகளாக அலைஞ்ச நாங்கள்"
புதுமாத்தளனில் உணவுக்கு கஸ்டப்பட்டோம். அங்கு தேங்காய் 2 ஆயிரம் ரூபா, சீனி 2,500 ரூபா, செத்தல் மிளகாய் 16,000 ரூபா, மீன் 1,500 ரூபா இப்படியாக பொருட்களின் விலைகள் இருந்தன. கப்பல் வந்தால் உணவுப் பொருட்கள் வரும். ஆனால் எங்களுக்கு வெறும் பருப்பு மட்டுமே கிடைக்கும். அதுவும் கோதுப்பருப்பு. என்ன செய்வது. பருப்பை வெறும் தண்ணீரில் அவித்து பசியை ஆறினோம். சிலர் சைக்கிளை விற்று, தங்கத்தை விற்று தேங்காய் வாங்கினர். எம்மிடம் பணமில்லை. அங்கு துப்பாக்கிச் சூடுகள் விழவிழ ஓடினோம். ஒரு சந்தர்ப்பத்தில் எம்முடன் வந்த ஆறுபேர் கால்களை இழந்தனர். நாதியற்று அலைந்து கடந்த ஏப்ரல் 16ம் திகதியன்று படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தோம். எம்முடன் 2,500 பேர் சரணடைந்தனர். நாம் செட்டிக்குளம் அருணாசல முகாமில் தங்க வைக்கப்பட்டோம். எமது ஒரு மகனை மொட்டை அடித்து வவுனியா காமினி வித்தியாலயத்தில் வைத்துள்ளனர். அவர் இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தர பரீட்சை எடுப்பவர். அவரை அவர்கள் விடவில்லை. நாம் அருணாசல முகாமில் 3 மாதங்கள் வரை இருந்தோம். சாப்பாடு பரவாயில்லை. நிவாரணம் தந்தார்கள். உடுப்புகளைத் தந்தார்கள். இன்று ஆண்டவன் அருளால் இங்கு வந்திருக்கிறோம். இனி புதுவாழ்க்கையை ஆரம்பிக்கவிருக்கிறோம்" என்றார். வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மக்கள் அண்மையில் அம்பாறை மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்டனர். இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் முதலில் காரைதீவு விபுலானந்தர் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதன்போதே நற்பிட்டிமுனையைச் சார்ந்த சிவராசா ரஞ்சனி தனது கசப்பான அனுபவங்களைக் கொட்டித் தீர்த்தார்.இவ்வாறு முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ள அனைவருக்கும் மரண வேதனையான அனுபவங்கள் இருக்கின்றன. ஊடகங்கள் அனுமதிக்கப்படாததன் காரணமாக அவை இன்னும் அவர்களின் மனங்களில் புதைந்துபோயுள்ளன.
- லங்காநியுஸ்வெப்

0 Comments:

Post a Comment